சொர்க்கமே என்றாலும் . . .

எனது தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர். திடீரென்று ஏற்பட்ட உடல் நிலைக் கோளாறு காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை பண்ண வேண்டியிருந்ததால் சுமார் நான்கு வார காலம் எனது சொந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து அப்பாவை கவனித்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பாக்கியமே.

யாருக்கும் எப்பொழுதும் கஷ்டம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியுடன் இருப்பார். இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு நாள் காலையில் என் அம்மாவை அழைத்து " கொஞ்சம் என்னுடன் வருகிறாயா.? , சிறிது வேலை இருக்கிறது .." என்று அழைத்து சென்றவர் நேராக சென்ற இடம் நகரத்திலுள்ள ஒரு பெரிய ஆஸ்பத்திரியின் ஆபரேஷன் தியேட்டர் வாசலுக்கு, " கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு . இதோ வந்து விடுகிறேன் ." என்று ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று விட்டார். அதன்பின் தான் அம்மாவுக்கே தெரியும் ஒரு வாரமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று ஆபரேஷனுக்கு தேதியும் குறித்த பின்பு அழைத்து வந்திருக்கிறார். அப்படியொன்றும் அது சாதாரணமான ஆபரேஷன் இல்லை. உடலினுள் ஏற்பட்ட ஒரு சிறிய கட்டியை நீக்கும் அளவிற்கான ஆபரேஷன். பல மாதங்களுக்கு பின்பு தான் எனக்கெல்லாம் தெரிய வந்தது. என்னத்த சொல்ல . . ?

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு லெல்லாந் தலை .


****************************************************************************************

திருநெல்வேலி - நகரத்தின் உருவம் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. பெருகிவரும் வாகன இரைச்சல், புதிது புதிதாய் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரெண்ட்கள், கடைகள் நன்றாகத்தானிருக்கின்றன. அதே நேரம் அதன் பாரம்பரியத்தை நெல்லை இழந்துவிடவில்லை.
டவுன் - நெற்றி நெறைய விபூதி, அதிகாலை பஜனை, வற்றாத தாமிரபரணி, சுத்தமான தெருக்கள், நெல்லையப்பர், காந்திமதி அம்பாளின் தரிசனம், கோவில் வாசல், அருகிலேயே மணக்கும் இருட்டுக்கடை அல்வா, வார்த்தைகளில் பாசம் தெறிக்கும் மக்கள், சுண்டி இழுக்கும் ரொட்டி, சால்னா மணம். அப்பப்பா....
அப்படியே ஜங்ஷன், பாளையங்கோட்டை பக்கம் சென்றால் ருசியான பல உணவகங்கள், பாரம்பரியமிக்க தேவாலயங்கள், பூத்து குலுங்கும் மலர்களைப் போன்ற பள்ளி குழந்தைகள் இன்னும் இன்னும் திருநெல்வேலியின் சுவை கூடிக்கொண்டேயிருக்கிறது.
புறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை.

*****************************************************************************************

தோழன் சாம், மற்றும் சார்லஸ் நேற்று இரவு பாளையங்கோட்டை , முருகன்குறிச்சி அருகில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றார்கள். முட்டை மட்டும் இணைந்த சைவ உணவகம் . ஆஹா . . நம்ம ஆளுங்க கலக்குறாங்கப்பா . . வித விதமா டிஷ் ரெடி பண்றான். முட்டை சப்பாத்தி என்றொரு அயிட்டம். சப்பாத்திக்கு உள்ளே முட்டையை கொண்டுவந்து ஒரு தினுசா கொடுக்கிறான். சான்சே இல்லை.
அப்புறம் பல வெரைட்டியில தோசை, இட்லி அமிர்தமா சாம்பார், சட்னி. முட்டையின் மஞ்சள் கரு இல்லாம வொயிட் ஆம்லெட். அடடடா. . . ஒரு சின்ன குடிசைக்குள்ள நளபாகமே நடக்குது. திருநெல்வேலி பக்கம் வர்றவங்க தகவல் சொல்லிட்டு வாங்க. முட்டை சப்பாத்திக்கும், வொயிட் ஆம்லேட்டுக்கும் நான் கியாரண்டி.


******************************************************************************************

பரண்களில் இருந்து எடுத்த என் தந்தையின் பழைய டைரியிலிருந்து . . .


சிந்தனையாளர்கள்


மனிதனுக்குச் சொந்தமான சந்தோசங்களையும், துன்பங்களையும் அதை அனுபவிக்கும் மனிதர்களை விடவும், சிந்திப்பவர்களே அனுபவிக்கிறார்கள். அவற்றில் வலிந்து போய் சிக்கி ஆழ்ந்து அனுபவிக்கும் மனம் கலைஞர்கள் - சிந்தனையாளர்கள் பெற்ற வரம் அல்லது சாபம்.


பிரச்சினைகள்


இயற்கையின் விதிகளுக்கோ, விஞ்ஞானக் கணிப்புகளுக்கோ , ஒரு பெரும் புதிர் இருக்கும் எனின், அஃது எமது மனிதர் தம் அறியாமையே ஆகும்.
அறியாமைக்கு உரியவர்கள் பெரும்பாலும் ஏன் முழுமையாகவே நமது அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாகவே இருப்பதால்தான் பிரச்சினைகள் யாவும் வெடிக்கின்றன.
பிறந்த நாள் தொட்டு நான் பிறருக்கே ஒரு பிரச்சினையாக இருத்தல் குறித்து, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான அவமானம் கொள்கிறேன்.
இந்தப் பிறவியில் எனக்கு கிட்டிய பேரருள் என்னவெனில் எனக்கு நான் என்றும் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை என்பதே ஆகும்.


*******************************************************************************************



Read Users' Comments ( 7 )

பேனா முனையில் . . .


வலைப்பூ என்ற வார்த்தையையே எட்டு மாதங்களுக்கு முன்பு வரை தெரியாதவனாகத்தானிருந்தேன். இப்பொழுது வரை ஒரு . . . ம் எழுதி கிழித்துவிடவில்லை.

ஏதாவது எழுத வேண்டும் என்ற எனது கொடூரமான சுய விருப்பத்திற்காகவும், உருப்படியாக செய்ய வேறு வேலை எதுவும் இல்லாத காரணத்தினாலும் (இப்பொழுது வரை . . ) கிறுக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எண்ணத்திலும் எழுத்திலும் ஒரு மன்னாங்கட்டியும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்ற பைத்தியகாரத்தனம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. (விதி . . )

கடந்த மூன்று மாதங்களில் எனது செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டாலும் இன்று வரை நான் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருப்பதற்கு முழுமையான முதற் காரணம் சக பதிவர்கள் மட்டுமே . . . பல சமயங்களில் லேசான பொறாமை கலந்த பிரமிப்புடன் இவர்களை வசிக்கும் அனுபவமே என்னை மேலும் மேலும் எழுதி இயங்க செய்து உங்களை மேலும் இம்சைபடுத்த வைக்கிறது.

நன்றி நண்பர்களே . . .

என்னதான் அடக்கி வாசித்தாலும் இதுவரை ஐம்பது பதிவுகள் நான் எழுதிவிட்டேன் என்பதே எனக்கு சற்று போதை தரும் விஷயம் தான்.
இந்த போதை தலைக்கு ஏறும் முன் சக பதிவர்களின் படைப்புகள் பக்கம் ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்தேன் என்றால் மொத்த போதையையும் இறக்கி தலையில் நாலு எழுமிச்சை பழத்தை தேய்ச்சி '' தம்பி , நீ இன்னும் வளரணும் தம்பி '' ன்னு சொல்லி வெறியேத்தி அனுப்பிடுவாங்க.

உடனே சிலிர்த்து கிளம்புற சிங்கம் ரெண்டே நாள்ல மறுபடியும் கூண்டுக்குள்ள போய் ஓய்வெடுக்க ஆரம்பிச்சிடும் வழக்கம் போல . ( நம்ம தொழிலே இதான . . )

ஆரம்பத்திலிருந்து எனக்கு எல்லா வகையிலும் ஆதரவளித்துவரும் கேபிள் அண்ணனுக்கும், தங்களது எழுத்துகளால் என்னை இயங்க வைத்துகொண்டிருக்கும் அண்ணன்மார்கள்., நர்சிம் , அப்துல்லா , பரிசில் , அதிஷா , செல்வேந்திரன் , ஆசிப் அண்ணாச்சி , ஆதிமூல கிருஷ்ணன் , யுவ கிருஷ்ணா மற்றும் உமா ஷக்தி , தவிர இன்ன பிற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி.

அண்ணன் சக்கரை சுரேஷ் க்கு என் அன்பு .

தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திவரும் வால்பையன் , நையாண்டி நைனா , macro , தம்பி ஷண்முக ராமன் , விக்னேஷ்வரி , தமிழச்சி , வெங்கி ராஜா , தத்து பித்து எல்லோருக்கும் என் அன்பு .

என் இம்சையை பொறுத்துக்கொண்டு என்னுடனே இருந்து என்னை ஊக்கப்படுத்தும் என் நண்பர்களுக்கும் , தம்பிகளுக்கும் என் அன்பு .


பழைய டைரி குறிப்புகள் .
( பழைய புத்தக சந்தையிலிருந்து . . . )




சில நேரம்
மானாய் துள்ளிப் போகும் !
மேகம் பொழிந்த
மழையாய் பொழியும் !
சிலபொழுது
நெருப்பாய் எரிக்கும் !
நரியாய் ஊளையிடும் .
காற்று கலைக்காத
மரமாய் மௌனிக்கும் .
இப்போது இப்படி
அப்போது அப்படி
என்று அளவிடமுடியாது !
இந்த மனசுகளே
இப்படித்தானோ . . . ?


*******************************************


கடமைக்கு குடும்பம் நடத்தி
கடனுக்கு வட்டி கட்டி
திரை முன்னால் கனவில் லயித்து
வரும் கஷ்டம் எல்லாம் சகித்து
எப்போதேனும் கொஞ்சம் சிரித்து
வெறுப்புதான் என்றாலும்
சமயங்களில்
ரசிக்கும்படியும் இருக்கின்றன
வாழ்தலின்
அவஸ்தைகள் . . . !



********************************************



கோயிலுக்கு போ என்றார்கள் .
சர்ச்சுக்கு போ என்றார்கள் .
மசூதிக்கு போ என்றார்கள் .
பார் - க்கு போ என்றார்கள் .
பீச் க்கு போ என்றார்கள் .
'' என்ன சார் ஆச்சு ..? ''
பரிவோடு கேட்டான் இஸ்திரி முருகன் .
மனக்கவலை சொன்னேன் .
மருந்து போல் ஒரு வார்த்தை சொன்னான் .
'' வீட்டுக்கு போ வாத்யாரே . . . '' .


**********************************************


Read Users' Comments ( 9 )

படித்து ரசித்தது . . .


நம் அறிமுக நாட்களில்....
மௌனங்களை பரிமாறிக் கொண்டோம்...
பின் கொஞ்சமாய் பார்வைகளும் புன்னகைகளும்...
பேச தொடங்கி... பின் நிறையப் பேசினோம்...
இதயம் வரை நீண்டது பரிமாற்றம்.

இந்நாட்களில் மீண்டும் துவங்கியிருக்கிறது...
மௌனங்களின் பரிமாற்றம்....
இம்முறை ஒவ்வொரு மௌனத்திற்கும்...
அர்த்தங்கள் கற்பிக்கிறது மனது...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்வைகள் தவிர்க்கப்படுகிறது...
பார்க்கும் பார்வைகளிலும் விடை தெரியா கேள்விகள்...
எந்த நிமிடமும் உதிர்ந்து விடும்...
ஒற்றை ரோஜாவின் கடைசி இதழாக...
நம்மிடையே மீதமிருக்கிறோம் நாம்...

நம்மை இணைத்திருந்த சிறகுகள்...
கனமாகிப் போனதாய் ஓர் எண்ணம்.
நேற்று வரை சுமந்த சிறகுகள்....
இன்று ஏனோ பூட்டப்பட்ட சங்கிலியாய்.

நம் சுயங்களின் சுமை தாங்காமல்...
நழுவி செல்கிறது முகமூடிகள்..
நம் உண்மை முகங்கள் பார்க்க பிடிக்காமல்..
பிரிவொன்றை எதிர்பார்த்து நாட்கள் கடத்துகிறோம்...

உனக்கும் இருக்ககூடும்...
சில காரணங்கள்..
உன்னிடமும் இருக்ககூடும்....
வலிகளை பட்டியலிடும் ஒரு கவிதை...
எனினும் அறிய விருப்பமின்றி விலகுகிறேன்...

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உண்டு...
பிரிவின் நினைவாய் புன்னகை தந்துவிடாதே...
பின் உன் எல்லா புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்.

நன்றி : சித்ரா தேவி.


Read Users' Comments ( 6 )

அழகிய தவறுகள் - II



*************************



மூன்றாம் வரிசை பெண்

என்னைப் பார்த்து முறைத்தபடி

நான்காவது தடவையாக

மாராப்பை சரிசெய்யும் பொழுதுதான்

கவனிக்கவே துவங்கினேன்

எடுப்பான அவளது மார்பகத்தை....



*************************



விலகிய சேலையில்

மழையில் நனைந்தபடி

கடக்கும் பின்னிருக்கை யுவதியின்

சலனம் தவிர்க்க

வண்டியை விரட்டினேன்

பாவம்

மழையில் நனைந்த மனம்

சேலையினுள்ளேயே கிடக்கிறது.




*************************



இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும்

டவுண் சந்தி பிள்ளையார் முக்கில்

ஒரு பக்க திறந்த மார்புடன்

அலைந்த கோட்டிகாரியின்

நினைவு தவிர்க்க முடியாததாகிறது

தெரிந்தே பார்வை தவறும் சில பொழுதுகளில்....



*************************



படித்ததில் பிடித்தது.


கையில் காசு இருந்தால்

டாஸ்மாக் பக்கம் போவான்.

இல்லையென்றால் செய்யது பீடி

குடித்துகொண்டிருப்பான்.

அதுவும் இல்லையென்றால்

கவிதை எழுதிக்கொண்டிருப்பான்.

- விக்ரமாதித்யன்.



*************************


Read Users' Comments ( 5 )

அழகிய தவறுகள் - 1



உடைந்த சிகரெட் துண்டுகள்

நிறைந்திருக்கும்

எனது அறையின் ஜன்னல் சுவரில்

தினமும் வந்தமரும் காக்கைக்கு


எப்படி தெரியும்..?


பலநேரத்து உணவின்


எச்சம் அவையென்பது . . .
?


******************************


நிகழ்ந்திருக்கவே கூடாத

உன்னுடனான இந்த சந்திப்பின் பாதிப்பை


இரண்டு குளிர்ந்த பீர் பாட்டில்களால்


சரிசெய்துவிடமுடியாதுதான்.


இருப்பினும்,


இதுபோன்ற சமயங்களில் நிகழும்


தவறுகள் அழகானதாகிறது எனக்கு.


மறுநாள் காலையில்


குற்றவுணர்ச்சி மனதை கொத்திப்பிடுங்க


ஒருபோதும் நேர்ந்ததில்லை


மலச்சிக்கல்.



******************************


முகம்தெரியாத பின்னிரவில்

அவளுடன் நெருங்கி களித்த

ஒருநாள் இரவை


ஞாபகப்படுத்தியபடியே


இருக்கிறது




எனது குளியலறை சுவரில்


ஒட்டிக்கொண்டிருக்கும்


ஒற்றை கரப்பான்பூச்சி




உடல் முழுவதும் குறுகுறுத்தபடி


விரட்டவே முடியாமல் . . .



******************************

கடைசி கவிதையில் பொருளில் குற்றம் உள்ளதென வாதாடி திருத்தம் செய்ய வைத்த தம்பி மாரியப்பனுக்கு நன்றி.


Read Users' Comments ( 17 )

பசுவய்யா - கவிதைகள்


ஐம்பதுகளின் துவக்கத்தில் எழுதத்துவங்கிய சுந்தர ராமசாமி மொத்தமாக எழுதிய கவிதைகள் மிகக்குறைவு . (பசுவய்யா என்ற புனைப்பெயரில்)

1931 ல் நாகர்கோவிலில் பிறந்த சுந்தர ராமசாமி ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் மொழிகளையும் கற்று தேர்ந்தவர்.

மூன்று நாவல்கள், 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 65 சிறுகதைகள் எழுதியுள்ளார். தவிரவும் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இருந்து பல நாவல்களையும், சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

சு.ரா.வின் படைப்புகள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரின் புகழ்பெற்ற நாவலான ''ஒரு புளியமரத்தின் கதை" , ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் ஹூப்ரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1988 ல் காலச்சுவடு இலக்கிய இதழை தொடங்கினார்.

சு.ரா. வின் கவிதைகள் தன்னை முன்னிறுத்தி வாழ்வின் ரகசியங்களை, ஏக்கங்களை, அறியாமைகளை, வெட்கங்களை, கனவுகளை, சோகங்களை வெளிப்படுத்துபவை.

மனித வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அறியத்துடிப்பவை.

ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி யில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் குறிப்பிடுகிறார் சு.ரா.

ஒருவித கிண்டலான தோனி இவரது கவிதைகளில் இருந்தாலும், ஆழ்ந்த தளத்தில் அனுபவப்பூர்வமாக சிந்தனையை தூண்டுபவை அவை.

தனது 74 வது வயதில் 2005 அக்டோபர் மாதம் 15 ம் தேதி சு.ரா காலமானார்.


********************


சவால்


நோவெடுத்து சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக்கட்ட
கயிருண்டு உன்கையில்


வாளுண்டு என்கையில்

வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலிமையுண்டு

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நடையேற்றும் காலங்கள்

எனது கோடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.


********************


கன்னியாகுமரியில்....


இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்

எங்கிருந்தோ வந்து

சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது

இந்த ஆட்டுக்குட்டி

அசடு
அபோதம்
தன்னிலை அறியாதது


இடம்பெயர்வதா நான்
அல்லது
நின்ற நிலையில் நிற்பதா?

மூளையின் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி

சூரியனைக் காணோம் .



********************


வாழ்க்கை


நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,

நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.


********************


கதவை சுண்டாதே


என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியை கட்ட கடைசி நாள் கேட்பாய்

பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
அவர் தொலைபேசி எண் ? என்பாய்

கையால் ஆகாதவன் என என்னைச் சொல்லாமல் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சரித்துவிட்டும் போவாய்

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை

அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுண்டாதே

தயவு செய்து ...



********************


இந்த நிழல்


எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?


பூமியில் காலுன்றி நிற்கும் போது

நிழல்மேல்தான் நிற்கிறோமா?

காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்

அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும் போது

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்கு தெரியவேண்டும்.


********************


வருத்தம்


வேட்டையாடத்தான் வந்தேன்

வேட்டைகலையின் சாகச நுட்பங்களை

தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்

பின் வில்வித்தை

பின் வாள்வீச்சு

பின் குதிரை ஏற்றம்

பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்

திறந்து வைத்த கற்பூரம் போல்

ஆயுளின் கடைசித் தேடல் இப்போது

இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை

பின்னும் உயிர் வாழும் கானல்.



********************


தனது மரணத்தை பற்றி குறிப்பிடும் போது ''ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.'' என்கிறார் சு.ரா.


என் நினைவுச்சின்னம்


இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே

நம் கலாச்சாரத் தூண்களின்

தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே
.
.

.
இருப்பினும்

நண்ப,

ஒன்று மட்டும் செய்.


என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
'கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்' என்று மட்டும் சொல்.
உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.


********************


Read Users' Comments ( 2 )

மும்பை - சங்கமம்


சமீப காலமாய் மிக அதிக பரபரப்பிற்கு பெயர் போன நகரம் மும்பை. நண்பர்கள் சூழ அதை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியமே ... பின்னே என்னங்க சொல்லறது...? மும்பையின் ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு பாம் வெடிச்ச கதை இருக்கு. பெண்களின் உயர்வான நிலைகளையும், அதற்கு நேர் எதிரான பெண்களின் நிலையும் அதிக அளவில் வெளிப்படையாக பார்க்க முடிவது இங்கு மட்டுமே... மும்பையின் டிராபிக் உலகம் அறிஞ்ச விஷயம். இவ்ளோவையும் தாண்டி ரசிக்கிற விஷயம் நிறைய இருக்கு மும்பைல....

எத்தனை பெரிய தாக்குதல் நடந்தாலும் அடுத்த நாளே இயல்பு வாழ்க்கைக்கு திரும்புற மக்கள். தீவிரவாதி தாக்குதல், தாஜ் ஹோட்டல் இரண்டாவது நாள் பக்கத்து தெருவில் வழக்கம் போல டீ கடை ஓபன் பண்ணி வியாபாரம் பண்ற மக்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்த அவங்க அங்க, அவயங்கள் மட்டுந்தான் சொல்லணும்.

வழக்கம் போல பார்ட்டி, ரோமிங் மட்டுமில்லாம ஒரு சின்ன சுவாரஸ்யமான சம்பவம், நண்பர்களுக்கிடையே நடந்த ஒரு பந்தயம். ஜுஹு பீச் - மும்பை. நம்ம நண்பர்களோட மும்பையின் அழகை கொஞ்சமா அள்ளி பருகிட்டு, பீச்- இளைப்பாறிக் கொண்டிருக்கோம். தூரத்தில ஒரு வெளிநாட்டு பொண்ணு. வழக்கம் போல நம்ம ஆட்கள் நாலு பேர் சுத்தி நின்னு அது சிகரெட் குடிக்கிறதை வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க. நம்ம நண்பர்கள் சவால் விட பேசியே தீர்வதுன்னு நானும் சக நண்பன் ஒருவனும் கிளம்ப, ஆரம்பமானது அமர்க்களம் . பெண்களோட பேசி அதிக பழக்கம் இல்லாத குரூப் நமளுது(நிஜமா நம்புங்க ....!) .


சரியாக பதினைந்து நிமிஷம் சக நண்பனுடன் சேர்ந்து எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் மொக்கை போட்டு கொஞ்ச நேரம் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்க முடியுமா .? என்று கேட்டதற்கு... பதில். வொய்நாட்..?
சரியா போச்சு.. நண்பர்கள் கிட்ட ஒரு படத்த ஓட்டிடலாம்னு பிளான் பண்ணி நண்பர்களை அறிமுகம் செய்தாச்சு. பெயர் இவான் ரித்லேர் ஊர் ஜெர்மன் அவ்ளோதாங்க அதுக்கு அப்புறம் எனக்கு எதுவுமே காதில விழல. ஏன்னா நம்ம காதில புகை தான் வருது. என்னை தவிர எல்லோரும் அவகிட்ட பேசிகிட்டு இருக்காங்க. சுமார் ரெண்டு மணிநேரம் அவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ மொக்கை போட்டாங்க. திரும்பவும் என் காதில புகை.


அவங்க பேசினதோட சாராம்சம் இதுதான்.. ஜெர்மன் பொண்ணு. சுமார் ஏழு மாசமா எட்டு நாடுகளை சுத்திட்டு முதல் தடவையா இந்தியா வந்திருக்கா தனியா..( நோட் பண்ணிக்கோ. ). நிஜம்மாவே ரொம்ப தைரியசாலியான பொண்ணு . (நாமெல்லாம் பக்கத்துல இருக்கிற மும்பை போறதுக்கே எட்டு வருஷமா பிளான் போடுற ஆட்கள் ) . ரொம்ப உஷார் . எது பேசணும்.. எது பேசக்கூடாது ன்னு நல்ல தெளிவு.

நல்லா போயிட்டு இருந்த அரட்டை கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் போட்டான் திடீர் பௌன்செர்.. ''கேன் யு ஜாயின் வித் அஸ டுமாரோ..? (அடப்பாவி..) நாளைக்கு நாங்க எல்லோரும் வாட்டர் தீம் பார்க் போறதா பிளான். உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நீயும் வா.'' சிறிதே தயங்கின பெண்ணிடம், பயப்படாதே.. உன்னோட பாதுகாப்பிற்கு நாங்க உறுதின்னு இன்னொருவன் யார்க்கர் போட விக்கெட் காலி. ஓகே . போலாம் அவ சொல்ல.. (இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிட்டு இருக்கு..?) நாளைக்கு காலைல அவ தங்கிஇருக்கிற ஹோட்டல் பிக்அப் பண்றதா சொல்லி சபையை கலைத்தோம்.

அடுத்த நாள் அவளை கூப்பிட்டு போவதா வேண்டாமானு எங்களுக்கிடையே சின்ன சலசலப்பு. பெரும்பான்மையான மக்கள் ஜெர்மனுக்கே ஆதரவு அளிக்க ஒரு சில கட்டுப்பாடுகளோடு அவளை அழைத்து செல்ல முடிவெடுத்தோம். நாங்க மொத்தம் ஏழு பேர். அதில நாலு பேர் நைட் தூங்கவே இல்ல..(சத்தியமா நான் அதில இல்லைங்க..). அதிகாலைலேயே ரெண்டு பேர் கிளம்பி அவளை பிக்அப் பண்ண போயாச்சு.

இவான் ரித்லேர் - அன்று இரவு ஏழு மணிக்கு கோவா போவதற்கு டிக்கெட் போட்டுருக்கா. அதுக்குள்ளே திரும்பியாகணும். மும்பை-யிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வாட்டர் கிங்டம் தீம் பார்க். அவளுக்கான சின்ன காத்திருப்புக்கு அப்புறம் பலமுறை மன்னிப்பு கேட்டவாறு வந்துசேர்ந்தாள். எங்களிடமிருந்த சிறிய சான்ட்ரோ-வை தவிர்த்து அவளுக்காக குவாலிஸ் அமர்த்தி கிளம்பினோம். (பட்சி சிக்கிருச்சு டோய்...)

அவளுக்காகவும் அவளை பிக்கப் பண்ண போன நண்பர்களுக்காகவும் காத்திருந்ததில் ஏற்பட்ட சின்ன சலிப்பு மற்றும் வெறுப்பு அவள் வந்து சேர்ந்ததும் இயல்பான கோபத்துடன் '' அம் ஆங்ரி வித் ஹங்க்ரி பிகாஸ் அப் யு ..'' என்று நண்பன் ஒருவன் அரைகுறை ஆங்கிலத்தில் ஆரம்பிக்க கலகலப்பாக துவங்கியது பயணம்.

அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வரலாற்று சுவடுகள் (இதெல்லாம் கொஞ்சம் ஓவர்பா...) .

இவான் தண்ணீரை பார்த்ததில் இருந்து குழந்தையாகவே மாறி இருந்தாள். பொதுவாகவே அருவியும், ஆறும், பெருமளவு நீரும் தன்னுடன் இணையும் எவரையும் குழந்தையாகவே மாற்றிவிடும் தன்மையுடையது.

நாங்கள் அனைவருமே குழந்தை பருவத்திற்கு திரும்பியிருந்தோம். நிறம், மதம், மொழி, நாடு அனைத்தும் கரையில் கிடந்தது. சந்தோசம் மட்டுமே எங்களுடன் சேர்ந்து தண்ணீரில் கும்மாளமிட்டது.

ஒவ்வொரு விளையாட்டிலும் இவான் முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்திகொண்டிருந்தாள். அவளுடைய கலாச்சாரம், மனமுதிர்ச்சி, எண்ணங்கள் முற்றிலும் வேறுபட்டிருந்தது . இவற்றை நம்மவற்றுடன் ஒப்பிட இயலாது ஒப்பிடவும் முடியாது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. இவான்-யதார்த்ததிற்கு மிகவும் அருகில் இருந்தாள். இருபத்தி மூன்று வயதில் அவளுடைய மனப்பக்குவம் ஆச்சர்யமான ஒன்று. அவளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாம் யதார்த்ததிற்கு வெகு தொலைவில் உள்ளதாகவே தோன்றுகிறது.

ஒன்றாக உணவருந்தி, விளையாடி, நடனமாடி களைப்புடன் அமர்ந்தோம். அவர்களின் பழக்கவழக்கம், திருமணம், பெற்றோர், விருப்பம் பல விஷயங்களை நம்மவற்றுடன் பகிர்ந்து பேசி குறையாத மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நேரத்தில் அவளை கோவா-விற்கு வழி அனுப்பிவைத்து திரும்பினோம். என்னை பொறுத்தவரை இவான் ரித்லேர் ஒரு பறவை சுதந்திர பறவை. ஒரு பறவையின் பயணத்தை எவராலும் கணிக்க முடியாது. அதன் பயணத்திற்கு என்றும் முடிவும் இல்லை.


Read Users' Comments ( 2 )

சுண்டகஞ்சி

*****************

இன்னாடா சுண்டகஞ்சி புட்ச்சா கீதுன்னு பாக்குறியா? நம்மாளுங்கோ அல்லாரும் காக்டைல், கொத்து பரோட்டா, அவியல், ஊறுகாய் ன்னு கூவி கூவி குடுத்து இம்சை பண்றாங்கப்பா . நம்மலான்டையும் கீற ஆறிப்போன சுண்டகஞ்சிய உங்களவிட்டா யாருப்பா குடிப்பா ? உன் தலைஎழுத்து என்னாண்ட மாட்டினுகீர... இதை படிக்கிற மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும். கண்டிப்பா நீ நினைக்கிற கிக் கொஞ்சமாவது கிடைக்கும்னு நம்பினுகிறேன். பார்க்கலாம்.

**************************************************************

கட்ச்சியா ஒரு மாசமா நம்மளுக்கு அல்லாமே பேஜாரா புட்ச்சுபா. எந்த பந்தை எப்படி உருட்டி போட்டாலும் நம்ம விக்கெட் விளுந்துகினேகீது. அப்பால ''சுனா பானா ஒன்னுமில்லடா ஒன்னுமில்ல '' ன்னு இல்லாத மீசைய தடவிகினு போய்கினே இருப்போம். என்னான்ற ?

***************************************************************

அரைஅவரு பிலிம் பார்த்துகினு அதுக்கு ஒரு விமர்சனம் எழுதுற ஆளு நாம மட்டும் தான். நம்மளாண்டதான் மிஸ்டேக். மாயாண்டி - படத்துக்கு மொதநாளே யாரான்டையும் கேட்காமா போனதுதான் தலீவா பெரிய தப்பாயிடுச்சு. கரீட்டா அரை அவரு அப்பால முடியல. ஒரு எஸ் ஜெ சூர்யா வை சமாளிக்கவே மொத்த தமிழ்நாடும் தினரிகினு கீது . பத்து பேரா? எவனும் வரமாட்டான். மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும்.
(கேபிள் சங்கர் அண்ணே... பிற்காலத்துல நீங்களும் சேர்ந்து எங்களை சோதிச்சிடாதீங்க... உங்க மேல நிறைய நம்பிக்கை வைச்சிகினுகீறோம்.)

****************************************************************

துட்ட கொட்த்து , ஓட்ட வாங்கி , சீட்ட புட்ச்சி நம்மாளுங்க அல்லாரும் அவங்க அவங்க ஏரியா வில செட்டில் ஆயிட்டாங்க. இன்னும் ரோட்ல சினிமா போஸ்டரை பார்த்துகினு கனா கண்டுகினே போறான் இழிச்சவாயப்பய மக்கா... எதுவும் மாறப்போறதில்லை சுவத்தில ஒட்டுற சினிமா போஸ்டரை தவிர.... மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும்.

****************************************************************

பதிவர் சங்கத்தில என்னா நடக்குதின்னே தெர்லப்பா..! மாத்தி மாத்தி கூவிகினுகீறாங்கோ... கலாசிகிறாங்கோ... திட்டிகிறாங்கோ... தீடீர்னு பிலிம் காட்டிகினுகீறாங்கோ... அப்பால திரும்பவும் அட்ச்சிகிறாங்கோ ... அடப்போங்கப்பா... எதும் சொல்றதுக்கே பயமா கீதுபா... ஆழம் பாக்கிறான்,
பப்ளிசிட்டி, வெண்ணை, விளக்கெண்ணை ன்னு புட்ச்சு புட்ச்சா வார்த்தைங்களை பார்க்கிறோம். போதாகொறைக்கு ஜாதி பேரை வேற சொல்லி திட்றாங்கலாம். என்னவோ நாலு பேருக்கு நல்லது நடக்கும் னா எல்லாத்தையும் அட்ஜஸ்டிக்கலாம். கட்ச்சியா பதிவர் மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும். என்னான்ற...?

****************************************************************

இத்தனை இம்சையிலும் புட்ச்சா கொஞ்சூண்டு எழுதினதும் , காலையிலேயே கொஞ்ச நாளா ரன்னிங் போய்கினு கீறதும் மட்டும் தான் உருப்படி. வரட்டா நைனா...?

*******************************


Read Users' Comments ( 7 )

நகுலன் கவிதைகள்- விகடன்

Thinnai
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60212212&format=html&edition_id=20021221

நகுலன் படைப்புலகம்


‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மெளனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலைமீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்பு கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம் .



ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறைய ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு .



நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை .



அலைகளைச் சொல்லி
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை .



எனக்கு
யாருமில்லை
நான்
கூட . .



அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகதெரியவில்லை
ஆனாலும் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்கார கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவி
தடவி அவன் உருக்கண்டு
உவகையுருகிறாள்
மறுபடியும் அந்த குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
- எந்த சுவரில்
எந்த சித்திரத்தை தேடுகிறாள் ?.



தன் மிதப்பு

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக்கொண்டிருந்தான்
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது அது
கூடத் தவறு , அந்த நிலையில்
அது தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில் . .



நன்றி : சாகர அலை , திண்ணை .



Read Users' Comments ( 9 )